Friday, October 23, 2020

முதுமை

 






ஆடி அடங்கி ஆட்டம் முடிந்த பின்
ஆடல் வல்லான் ஆலய வாசலில்
அடுத்த வேளைச் சோற்றுக்கு
அடுத்தவர் கையை நோக்கும் அவலம்!

நீறு அணிந்த பிறை நெற்றி
நீர்த் திரை மறைக்கும் சிறு விழிகள்
நிறம் கருத்த நெடு மேனி
வரம் வேண்டித் தவம் கிடக்கிறது!

பெற்ற பிள்ளைகள் பிழைப்புத் தேடி
பெற்றவரை விட்டு விட்டுத் தனம்
பெறப் பரதேசம் போனதனால்
பெற்றவர்கள் பெற்றது பரதேசிக்கோலம்!

உற்ற துணை யாரும் இல்லை
உறுதுணையாக வரும்
உறவுகள் ஏதுமில்லை – புது
உறவு உருவானது புண்ணிய பூமியில்!

முதுமையின் முடியாமையால்
முயல்வதற்கு இயலாமையால்
மூவரும் மூலவரை நோக்கி
முக்தி வேண்டி பக்தி செய்கிறார்!

சங்கொலி முழங்கிச் 
சங்கடங்கள் தீர வேண்டுகிறார்
சங்கரனே சற்று இரங்கிடு!
சங்குப்பால் குடித்தவர்கள் 
செவியில் இதைச் சேர்த்திடு!

நன்றி

படக்கவிதைப் போட்டி 280

No comments: