Tuesday, May 29, 2018

வந்தாய் என் வழித்துணையாய்


கண்ணே உன் காதோரக் கம்மல்
என்னைக் கவிபாடச் சொல்லுதம்மா
பெண்ணே உன் விழிபேசும் மொழியின்
மின்சாரத் தாக்கம் என் உயிருக்குள் செல்லுதம்மா
மன்னனானேன் நானுனக்கு மாலையிட்டு மகிழ்வுடனே
புன்னகையின் புதுவெள்ளமதில் என்னை நீந்தவைக்கும்
மென்னகையாளே வாழ்க்கை என்னும் பூவனத்தில்
என்னோடு வழித்துணையாய் என்றும் வருபவளே
கொஞ்சும் மழலைச் செல்வங்களிரண்டு
கொஞ்சி மகிழ்ந்திடத் தந்தாயே – திரைகூப்பி வெண்
பஞ்சாய்த் தலைநரைக்கும் காலத்திலும்
நெஞ்சமிரண்டும் அன்புடன் இணைந்திருப்போமே
வேலைமுடித்து நான் களைத்துவரும்
வேளையிலே கோலமயிலே நீ என்
களைப்புத்தீர அன்பு நீர்க் குவளைதனை ஆசையோடு
வளைக்கரங்களில் தாங்கி வந்து தருவாயே
கவலை மறந்து சிரித்திருப்போம்
கதைகள் பலபேசி மகிழ்ந்திருப்போம்
கருணை மாறாது பல்லுயிர்க்கும் உதவிடுவோம்
காலங்கள் கடந்தும் வாழ்ந்திருப்போம்
முல்லை மல்லிகை மலர்களைப் போல
வெள்ளை மனம்தான் கொண்டவள் நீ
எல்லையில்லா அன்போடு என்றும் நன்றாய் வாழ்வோம்
தில்லையாண்டவன் துணையோடு நாம்!

No comments: