Tuesday, May 29, 2018

வெற்றியின் வேதம்

முடிவதில்லை எதுவும் முயலாமல் தன்னாலே
முடியாததில்லை எதுவும் முயன்றாலே
முடியுமென்று முன்னேறு – உன்னாலே
முடிந்து உடையும் தடைகள் பல பின்னாலே
கடமையை மட்டும் செய் கவனமாய்
கடுமையின் கொடுமைகள் கட்டளையிடும்
கடைசி வாய்ப்பாயினும் கைவிட்டுவிடாதே
கடினமாய்ப் போராடி வாழ்வை உனதாக்கி உயர்வுகொள்!
வெம்மை காட்டும் சுடுபொழுதில் உடல்
வெளியேற்றிய உப்புக்கரிக்கும் வியர்வைக்கிடையில்
வளைந்த முதுகின் வலிமையால்
விளைந்த வெற்றியே உழைப்பின் பெருமை!
காடு மலை மேடு எல்லாம் உன்
கடும் உழைப்பால் காட்சிபெறும்!
கழனியாய், காய் கனி விளையும் சோலையாய்க்
காலம் கடந்தும் நிற்கும் உன் உழைப்பு வெற்றி மாலையாய்!
நெம்புகோல் தத்துவமே வாழ்க்கை
தெம்புகொண்டு எழுந்து நட நம்பிக்கையோடு!
நம்பு நீ ஒரு நெருப்புக்கோள் – சிற்றுளி
அம்புகள் பிளக்கும் பெருமலைப் பாறைகள் ஏராளம்!
உழைத்துக் களை! உடல் இளைக்க உழை! யாருக்கும்
சளைத்தவனல்ல நீ – உன்னால் முடியாது என்றதை எல்லாம்
விளைவித்துக் காட்டு என்னாலும் முடியும் என்று – ஓங்கி உயர்ந்த 
உழைப்பாளர் சிலை போதிக்குமே உனக்கு வெற்றியின் வேதத்தை!
http://www.vallamai.com படக்கவிதைப் போட்டி 161 சிறந்த கவிதையாய்த் தெரிவுசெய்யப்பட்ட கவிதை

http://www.vallamai.com/?p=85357

No comments: