Thursday, September 25, 2014

கூவும் குயிலும் தாவும் நதியும்

கூவும் குயிலும் தாவும் நதியும்
குயில்
வாடும் பயிர் காத்து புனல்
தேடும் உயிர்க்கெல்லாம் நீர்பால் சுரக்க
காடும், கடு மலையும் கடந்தே
ஓடும் நதித்தாயே ஓர் விண்ணப்பம்
பாடும் குயில் நான் பாடும் பண் கேட்பாயா?


நதி

கூவியழைக்கும் இசைப் பூங்குயிலே
செவியினிக்க நீ படிக்கும் செழுங்
கவியைக் கேட்க எனக்கும் ஆசைதான் ஆயிரம்
ஆவி துடிக்க தாகத்தில் தவிக்கும் உயிர்கள் ஆயிரம்
தாவி வரும் எனக்காக தவமிருக்கிறதே.

குயில்

அசைந்தாடும் இடுகரை எழில் நாணல் பயிரிடை
இசைந்தாடி இடையிடையில் பூம்பொழில் புகுந்து விளையாடி
ஓசையிட்டு ஓயாமல் ஓடும் உன்னோடு
இசை மீட்டி இணைந்து வரும் வண்டுகள் போல்
ஆசையாய் இளங்குயில் நானும் வாரேன்.


நதி

செவ்விசை படிக்கும் செல்ல கருங்குயிலே நல்லன
சொல்லிடும் வெல்ல மொழியாளே
சோர்வு நீங்கும் உன்னிசையாலே ஆயினும் நான்
செல்லும் வழி நீண்டதம்மா
சேரும் இடம் வெகு தூரமம்மா.

குயில்

பொன்விளையும் மண்
அன்னையவள் தண்ணீர் தாகம் தணிக்கும்
வெண்அலை பொங்கு புனல் நதியே
இன்னல்மிகு உன் வழிப்போக்கின் வருகைக்கு
என்னிசையால் ஏற்ற மருந்திட ஒரு வாய்ப்பு தரவேண்டும்.

 நதி

பாசப் பண்ணிசை பாடவரும் பூங்குயிலே
வேசப் போர்வை மூடி வையத்தில்
நேசம் காட்டும் உன்னைப்போல் ஒருவர்
வாசம் செய்வது அறிந்தோமே நல் நட்பே
பேசும் துணையாம் நீ வர பேரென்ன செய்தேனே.

குயில்

அனுமதி தந்த ஆழி சேர் நீர் நதியே
ஆண்டவன் உமக்களித்த அரும் பணியாம்
அனைத்துயிர்க்கும் தாகம் தணிக்கும் பெரும் பணியே
அணவளவும் தளர்வின்றி செய்யும் உன்னை
அனுதினமும் வாழி வாழி என வாழ்த்துகிறேன்.

நதி

உயர் வான் வெளியில்
உலவுகின்ற முகிழ்தாயின்
உன் மடியில் கருக்கொண்டேன்
உயர் மலை முகட்டின் மீது மழையாகி
உருக்கொண்டேன் நதி குழவி நான்கானே.

குயில்

ஓடையாய் நடை பயின்று ஒய்யார நடைபயின்று
ஓசையிடும் அருவியாய் குமரியானாய் புனல்
ஆடை சூடிய புது மணப்பெண்ணாகி
அணை கணவனுக்கு அடிமை மனைவியானாய்
ஆசையாய் கயல் பிள்ளைகள் துள்ள தாயானாய்.

நதி

அணை கணவனின் கைவிலங்கை
அறுத்தெரிந்து சமவெளி பிள்ளைகளிடம்
ஆதரவு கேட்டேன் அவர்களோ மணல்
அள்ளக் குறையாத அமுதசுரபி இவள் என்று
அன்னையென்றும் பாராமல் என்னை சூரையாடிவிட்டனர்.

குயில்

கிழங்கென இருந்த நீ இன்று
கிழப்பருவம் எய்தி புனல் குருதி சுண்டி
கிடையாய் கிடக்கையில் இடையிடையில்
கீழ்நிலை மனம் கொண்ட ஆலை அரசர்களின்
கழிவு நீர் கிடங்காய் முதியோர் இல்லம் சென்றாய்.
  
நதி

கண்டிடுவேனே என் கடல் காதலனை ஏற்று
கொண்டிடுவானே அவன் அனைத்தும் இழந்த என்னை
கொண்ட வளங்கள் அனைத்தும் கொள்ளை போனதே
கொடுமையின் இரணங்கள் இவைகளை எங்கு
கொண்டு செல்வேன் யாரைக் கண்டு சொல்வேன்.
  
குயில்

வற்றாத நதியே வனம் காத்த தாயே
முற்றாக அழிந்ததம்மா உன் சீரிளமை
முழம் போட்டு அளந்து முறம் போட்டு
வாரிவிட்டார் உன் வளத்தை இவர்
கற்கால மனிதர் அல்லர் கற்றறிந்த மாந்தர்களம்மா

 நதி

வெண்ணீராய் கொதிக்கும் வெள்ளி கடல்
மண்ணீரும் மாண்டு காய்ந்ததுவே மலையிருந்த
வெண்பனியும் வெப்பத்தால் சாய்ந்ததுவே
கண்ணீர் விட்டு அழுகின்றேன்
தண்ணீர் மட்டும் என்னில் இல்லை.

குயில்

நதியே நீ இறக்குமுன்னே
நாதியற்ற சாதியாய் நாங்களும் சாகின்றோம்
நீதியற்ற மானுடத்தின் நிலையற்ற செய்கையால்
நீல வான்மழையும் அமிழமாகி
நிறைக்கும் உலகை ஒருநாள் நிம்மதியாய் நீயுறங்கு.
  
நதி

கூட வந்த கூட்டுக் குயிலே
மாடங்கள் அழியுதுபார், மாளிகைகள் சாயுதுபார்
மண்ணிரண்டாய் பிளக்குதுபார்
மரம் கொன்று மழை கொன்று நம்மை கொன்ற
மானுடம் மரணத்தில் புதையுது பார்.

குயில்
வாடும் பயிர் காத்து புனல்
தேடும் உயிர்க்கு நீர் பால்அமுது ஊட்ட
காடும் கடுமலையும் கடந்தே
ஓடிவரும் நதித்தாயே ஓர் விண்ணப்பம்
பாடிவரும் குயில் என் பண்ணிசை கேட்பாயா?

No comments: