Thursday, September 25, 2014

நாளை வரும் காலை

பால் நிலவு சிரித்திருக்க
பகலவனோ உறக்கத்தில், பனித் துளியோ
பட்டு இதழ் விரித்த மொட்டு மலர் மஞ்சத்தில் படுத்துறங்கும்
பனிவிழும் இளங்குளிரில் இதமாக இசைபாடும் சில் வண்டினங்கள்


புள் உறங்கும் காட்டினிலே
பூவுறங்கும் பொழுதினிலே
பூத்திருக்கும் அமைதிதனை
பார்த்து ரசிக்க ஏங்கும் மனது.
நாளை வரும் காலை

கானகத்து கவின் மலர்கள்
காலை வரும் கதிரவனின்
காட்சிதனை கனவினிலே
கண்டு மகிழும்

பாட்டினுக்கும் குயில் பேடுகள்
கூட்டினிலே குளிரினிலே
உடல் நடுங்க குறுகுறுத்து
தானுறங்கும் குற்றுயிராய்

வான்திரியும் முகில் கூட்டம்
தான் சுரக்கும் சாரல் மழை துறல்களை
தேன் சுரக்கும் மலர் கூட்டம் வீசு
தென்றலிலே பரப்பிவிடும் பூவாசம்தனை

நீல்வரை முகட்டிருந்து 
நிலமகளின் கால்வரை கொட்டும் வெள்ளி அருவி
நிலவான் தாரகைகள் நித்திரை கொள்ளாமல் பனித்திரையூடே
பார்த்து ரசிக்கும் இரவின் அழகினை

அழகெனும் பதத்திற்கு
ஆற்றல் மிகு இயற்கை
படைத்தளித்த பெருங்கொடைதான்
பனிவிழும் இரவுகள்.

மண் உறங்க மானுறங்க
மரமுறங்க மயிலுறங்க
மனங் மட்டும் உறங்க மறுக்கிறது.
மலர்கின்ற இளங்கதிரை இரு கரம் கூப்பி வணங்கிடவே நினைக்கிறது.

No comments: