வாய்ச்சொல் வீணரிடை
வாள்சொற் சுழற்றிய வீர அபிமன்யு
வசன கவிதைக்கு வித்திட்ட கவியுழவன்
வளர்தமிழுக்கு பா புரவி பூட்டி தேரோட்டிய கவிச்சாரதி
பெண்ணியத்தின் முன்னுரிமைக் காவலன்
கண்ணியத்தில் முறை தவறா நாயகன்
கண்ணனவனின் முத்தமிழ் சேவகன்
கண்ணம்மாவின் முழுமுதற் காதலன்
அச்சம் கொன்று இச்சகத்தை வென்ற ஞானசுடரொளி
உச்சிமீது இடிந்து வீழும் வானையும் துச்சமென
உள்ளங்கையில் பிடித்து பொடித்து வீசும் இரசவாதி
உயிர் புலன்களை உசுப்பி உயிர்பிக்கும் ஊழித்தீ
சாதிக் கொடுமைகளை சாடிய நீதி தேவன்
சமய தீமை சுட்டு வீர கானம் பாடிய என் தேசக் கவி
சிந்தனை ஒன்றுற விடுதலை வேண்டி கண்ட சந்திர சூரியன்
சின்ன குழந்தைக்கும் அறசீற்றம் போதித்த அக்கினி குஞ்சு
வையம் விழிப்புற உதித்த விடியலின் எழுகதிர்
ஐய்யம் தீர்த்து அறிவு அமுதூட்டிய ஆழிப் பெருங்கடல்
பொய்மையின் உயிர் குடிக்க
வந்த ஊழிப் பெருங்காற்று
மெய்மையின் மேன்மை தாங்கிய புதுபுனல் ஊற்று
எட்டையபுரத்து சுட்டெரிக்கும் ரௌத்திரக் கனல்
எட்டாதனவற்றையும் எட்டிதொட்ட கெட்டிக்காரன்
வெட்டிப் பேச்சு வீணரை எட்டி உதைத்து
வெட்டிச் சாய்க்கும் பாட்டுவாள்
சுட்டும் விழிச் சுடர் கொண்டு மடமை கொழுத்திச்
சுட்டு மாட்சிமையுரைத்த
மானுடக் கடவுள்
வெட்டும் மின்னலாய் மூடத் தனத்தை மோதி
முட்டிச் சாய்த்த முன்டாசு இடிமுழக்கம்
இரும்பைக் காய்ச்சி யந்திரங்கள் வகுத்திட சொன்ன இயந்திரன்
வரும் காலனை காலருகே வா என உதைத்த எக்காலகவிஞன்
ஒருவனுக்கு உணவில்லை எனில் உலகழிக்கும் மீசைக்காரன்
பாருக்குள் நல்ல பாரதத்தின் பாட்டுடை தலைவன் என் பாட்டன் பாரதி
சு.பாஸ்கரன்
13/12/2018
No comments:
Post a Comment