என்று விடியும் எம்மவர் பொழுது
இழந்ததைப் பெறவே இருப்பதை இழந்தர்
இறந்தவன் உதிரம் காயும் முன்னே
இருப்பவன் பிணமாய் சாய்கின்றான்
இறப்பது தெரிந்தும் பிறக்கிறார் சாக
என்று தனியும் எம்மவர் தாகம்
வளங்களை இழந்து
வாழ்வினை தொலைத்து
நித்தம் எரியும் யுத்த நெருப்பில்
நிர்கதியாய் நிற்கின்றார்
குண்டு மழையில் நனைந்து
குருதிச் சேற்றில் விழுந்து
கொத்துக் கொத்தாய்
செத்து மடியிதடா உன்
செந்தமிழ் உயிர்பிறப்பு
பண்டு நாளில் படை கொண்டு
பாராண்டான் பழந்தமிழன்- இன்று
பக்கத்தில் உள்ளவன்
துக்கத்திற்கு கூட
சத்தமிட்டு அழ முடியவில்லை
வெந்த புண்ணில் வேல் பாய்சி
வேதனைத் தீயில் நெய்யூற்ற
வந்ததடா வாய்ப்பூட்டுச் சட்டம்
வகுத்தவனுக்கே வலியிருந்தும்
வழியின்றி வாய் மூடி அழுகின்றான்
படை கொண்டு பாழ்படுத்தி
உடை களைந்து சீரழித்து வெற்றி
அடைந்திட தான் துடிக்குது
ஆதிக்க இன வெறி
அதுமட்டும் நடக்காது
எங்கெல்லாம் என் தமிழன்
ஏணியாய் உள்ளானோ
அங்கெல்லாம் ஏறிய பின்
எட்டி உதைக்கின்றார்
எம்மவன் துயர் துடைக்க எவனுமில்லை
பட்டினியால் சாவும் உயிர்களின்
பசிக்கு உணவனுப்ப பல தடைகள்
படுகொலை பாவிகளுக்கு
படைக்கலன் ஆயுதம் என
பலவகை உயிர் கொல்லி உதவிகள்
அகிம்சை தேசத்தின்
அரிதார பூச்சு அரசியல் வேசிகளே
அங்கு ஒலிக்கும் மரண ஓலங்களுக்கு
மூல காரணம் உங்கள்
முதுகெலும்பில்லா முனகல்தானே.
தன்மான தமிழர்களே
தளைகளை வெட்டி ஏறிந்து
தலை நிமிர்த்தி வாருங்கள்
தவிக்கும் தமிழனின் துயர் துடைத்து
தாயாக துணையிருக்க
உரிமைக்கு குரல் கொடுப்போம்
உறவுக்கு கை கொடுப்போம்
உள்ளமெல்லாம் நிறைந்திருக்கும்
உணர்வுகளை உறுதி கொண்டு
உறக்க முழக்கம் செய்வோம்
1 comment:
நல்ல வரிகள்..பாராட்டுகள்..
Post a Comment