|
முற்றுப்புள்ளிகளை முழுமையாக்கி
அழகு கோலமிடும்
முகம் காட்டா சகோதரியே
முழுக்க மூழ்கியது போதும்
முதுகுப்பக்கம் கொஞ்சம்
முகம் திருப்பு- உன்னை முற்றுகையிட்டுள்ள
மூன்றாம் கண்ணின் பார்வைகள்
முற்றுப் பெறட்டும்
மாக்கோலம் தவறானால் மலர்க்கோலம்
தீட்டிடலாம்
பூக்கோலம் சிதறிவிட்டால்
புதுக்கோலம் போட்டிலாம்
நிலக்கோலமிட்டது போதும்
நிமிர்தல் செய் சற்றே இல்லையேல்
காட்சிப்பிழைகளையே ஆட்சியில்
ஏற்றும்
மாட்சிமை மறந்த பூகோள
மானுட சமூகத்தின்
காட்சி ஊடக கலிகாலம் இதில்
சிறுகவன சிதைவும்
சாட்சியாகி சங்கடங்கள்
பல தந்துவிடும்
பழுதடைந்த பார்வை விழிமூடர்களின்
பாலின வன்முறை வெறியாட்டங்களினால்
பலத்காரமாய் சீரழிக்கப்பட்டு
பாவம் பெண்மையே
பழியாடுகளாய் எப்போதும்
வெட்டுப்படுகிறது
ஒளிக்கோலங்களின் ஒவ்வாமை
மொழிகளால் உன்
விழிக்கோளங்களில் வெம்மை
நீர்வீழ்சிகள் உருவாகலாம்
வேலியற்ற இணைய வெளியின்
வழிகளில் முட்களாய்
போலிக் கலைகாலிகள் பசுத்தோல்
போர்த்தியபடி
இலைமறைகாயாய் இருந்தன
எல்லாம்
இலவசமாய் இங்கு பதிவிறக்க
கிட(டை)க்கிறது
இளந்தாரிகளின் இலக்கற்ற
விடுதலை உரிமைக்கும்
இலக்குவன் கோடுகள் சில
இங்கே தேவையாகிறது
---------------------------------------------
படக்கவிதைப்போட்டி 196
”அழகுக்கோலமிடும் முகங்காட்டாச் சோதரியே! ஒளிக்கோலங்களின் ஒவ்வாமை மொழிகளால் உன் விழிக்கோளங்களில் வெம்மை நீர்வீழ்ச்சிகள் உருவாகக்கூடும். வேலியற்ற இணையவெளியில் உலவும் காலிகளால் இலைமறை காயாய் இருந்தனவெல்லாம் இப்போது இலவசங்கள் ஆயின. ஆகவே குனிந்தது போதும்; நிமிர்தல் செய்!” என்று கோலமிடும் பெண்ணை அன்போடு எச்சரிக்கின்றார் திரு. யாழ் பாஸ்கரன்.
–மேகலா இராமமூர்த்தி
Tuesday,
January 22, 2019, 22:14
http://www.vallamai.com/?p=90252
|
No comments:
Post a Comment