Monday, September 30, 2019

இன்புற்று இருப்போம்

இன்புற்று இருப்போம்!
வாசனைப் பூ மகளே வசந்த வயலின்
வாடாத புத்தம்புது மலர் மல்லிகையே
வண்ணப் பொடிகள் வாரியிறைத்ததால்
வானவில்லானதோ உன் கன்னங்கள்?
கொண்டாட்டமே களிப்பு
கொண்டாடுவோமே கவலை மறந்து
கொடுத்தால் வளருமே அன்பு அதைக்
கொடுத்தே பெறுவோம் அன்போடு!
எல்லையில்லாப் பால்வெளியின்
எழுச்சிமிகு மின் மினியே!
எங்கும் ஒளிதரும் கதிர் போல
எழிலே நீ எதிர் வந்தால் பொங்கும் மகிழ்ச்சி!
பொன்நகை அணியாச்
சின்னத் தாரகையே – உன்
மின்நகைப் புன்னகையால்
மண்ணில் அன்பு மீண்டும் தழைக்கட்டும்!
கார்குழலை வாரிமுடி!
கருணையல்ல உரிமை!
கட்டுத்தளைகளை வெட்டி எறி!
கட்டவிழட்டும் அடிமை முடிச்சு!
இனி இல்லை எங்கும் எல்லை
இனிதாகுமே வாழ்வின் பயணம்
இனிக்க இனிக்க வாழ்ந்திடுவோம்
இன்புற்று இருக்க அன்புற்று இருப்போம்!


No comments: