Wednesday, September 18, 2019

முதுமை


நெறியில் பழுத்த பழம்
நெற்றியில் இழுத்த திருநீற்றுச் சிவம்
நேற்றைய பட்டறிவின் முதிர் நரை
நேரற்ற சுருக்கங்கள் முதுமையின் முக்தி நிலை   

அச்சிட்ட தாளில் அப்படி என்ன தெரிகிறது?
அழிந்துபோன வாழ்க்கையின் தொலைந்த பக்கங்களா? இல்லை
அடுத்து வரும் நாட்களின் இருண்ட பக்கங்களா?
அழகானதோ அழுக்கானதோ அதுவும் ஒரு சுகம் தானே?

எத்தனை சாதனைகள் எத்தனை சோதனைகள்
எண்ணிக்கையில்லாத வாழ்க்கையின் பின்னல் முடிச்சுகள்
எதிர்பார்ப்பும் ஏமாற்றமுமாய்
எல்லாமும் எப்படியோ அவிழ்க்கப்பட்டு விட்டது!

சிரிப்பாகத்தான் இருக்கிறது நுனி மரத்துச்
சிறு குருத்து மட்டைகளுக்கு
சிவந்து பழுத்த அடி மட்டைகளைப் பார்க்கும்போது
சீக்கிரமே தாங்களும் பழுத்துவிடுவோம் என அறியாமல்!

கடமைகள் முடித்தாகிவிட்டது
கடன்களும் அடைத்தாகிவிட்டது
கடந்த காலத்தில் தேட மறந்த
கடவுள் மட்டுமே துணை கடைசிக் காலத்தில்

இனி எல்லாம் அவன்தான் அவனே அன்பின் கூடு
இயன்றதைச் செய்தே இன்புற்று வாழ,
இனியவை தேடி இறைவனை நாடு
இனி இல்லை என்றும் ஒரு கேடு
!

No comments: