Pages

Monday, November 04, 2019

தாயவள்

தாயவள் தோளில் தவழ்கின்ற
தூயவளே கண்மணியே!
துள்ளிக் களித்தே பின் நோக்குகிறாய்
தூக்கம் வரவில்லையோ? – தூளியது ஏங்குதம்மா
அன்னையவள் அள்ளியணைத்து
ஆரத் தழுவி அமுதே தேனே அஞ்சுகமே என
ஆசையாய்க் கொஞ்சுகையில் நெஞ்சில்
அன்பு தவழுதம்மா ஆருயிரும் சிலிர்க்குதம்மா!
பிள்ளைக் கனியமுதே பேசும் பொற்சித்திரமே
கள்ளமில்லாக் கற்கண்டுப் பொற்குவையே
வெள்ளை உள்ளத்து வளர்கவின் நிலவே
எல்லையில்லா இன்ப அமுதூற்றே ஆவி துடிக்குதம்மா!
உன்னை வளர்த்து ஆளாக்க
உன் அன்னையவள் அல்லும் பகலும்
உழைத்திருப்பாள் ஊணுறக்கம் இல்லை அவளுக்கு
உலகே நீ தான் என்று உள்ளம் மகிழ்ந்திருப்பாளம்மா!
காலத்தால் அழியாத களவாட முடியாத
கல்விச் செல்வம் அதைக் கண்ணும்
கருத்தாக நீ கற்றிடவே கலாசாலைக்கு அன்போடு
கருமைப் பொட்டு வைத்து அனுப்பிடுவாளம்மா!
அன்னை போல் அன்புகாட்ட ஆர் உளார்
அவனிதனில்? அன்னையே யாவரும் அறிந்த
அன்பு தெய்வம்மம்மா அவளுக்கும்
அன்பு செய்வோமம்மா அகிலம் வாழுமம்மா!

1 comment:

  1. Happy New Year

    அருமை

    www.nattumarunthu.com
    nattu marunthu kadai
    nattu marunthu online

    ReplyDelete